×

தாம்பரம் அருகே வாலிபரிடம் 3 துப்பாக்கி தோட்டா பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே நேற்றிரவு போலீசாரின் தீவிர வாகன சோதனையில், சந்தேக நிலையில் வந்த மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரை சோதனை செய்ததில், கைத்துப்பாக்கியின் 3 தோட்டாக்கள் மற்றும் அவற்றை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேன்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அருகே சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு அருகே நேற்றிரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் நடந்து வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது.

அந்த மர்ம வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இச்சோதனையில, அப்பைக்குள் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 3 தோட்டாக்கள், தோட்டாக்களை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேண்டில்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு லெனின் மற்றும் மேத்யூ என்ற 2 ரவுடிகளின் தலைமைகீழ் பல்வேறு கோஷ்டிகள் இயங்கி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒருசில கும்பல் துப்பாக்கி முனையில் பலரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை போலீசாரின் அதிரடி சோதனையில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 3 மற்றும் அதை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேண்டில்கள் பிடிபட்டுள்ளன. இதனால் அந்த மர்ம நபரை பிடித்து, ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், இங்குள்ள ரவுடி கோஷ்டிகளுக்கு துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் மர்ம நபரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே வாலிபரிடம் 3 துப்பாக்கி தோட்டா பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Sriperumbudur ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!